விதியின் வழியில்..
வாழ்வின் எல்லையை அறியாத
தொல்லைகள் புரியாத
துள்ளித் திரிந்திட்ட
பிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தை கொடுத்தவள்
கொள்ளை இன்பத்தில்
காதல் வளர்த்தாள்
கள்ளத்தனமின்றி
உள்ளச் சோகத்தோடு
செல்லக் கதைதனையும்
சேர்ந்தே பயின்றதினால்
சொர்க்கத்தின் படிகளில்
செல்கின்ற சந்தோசம் - அவள்
உள்ளத்தில் பளிச்சிட்டது
வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு
விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்
உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை....!

No comments:
Post a Comment