கூடங்குளம் போராட்டங்கள்
மின்சாரம் என்பதன் உணர்வே இல்லாமல் அதன்
முழு பயனையும் அனுபவிக்கும் எனக்கு கூடங்குளம் பற்றி கருத்து சொல்ல அருகதை
இல்லையென்பதோடு அணுவியல் மின்சாரம் குறித்த அரிச்சுவடி கூட தெரியாமல்
மேதாவித்தனம் காட்டுவதும் சரியில்லை.மாறாக மனிதாபிமான உணர்வுகளை
வெளிப்படுத்துவதற்கு மேதாவித்தனம் தேவையில்லையென கருதுகிறேன்.
தமிழகத்திற்கு மின்சார தேவை ஒரு பக்கம்,
ஜப்பானின் சுனாமிக்குப் பின் அணு மின் நிலையம் பற்றி புதிதாக முளைத்துள்ள
ஆபத்து ஒரு புறம் என மிகவும் சிக்கலான சூழலில் தமிழகம் வாழ்க்கைப்
போராட்டத்தில் சிக்கியுள்ளது வருத்தமளிக்கிறது.நேற்று வரை உங்களில் ஒருத்தி
நான் என்று சொல்லி வந்த ஜெயலலிதா திடீரென நிலை மாறும் சூர்ப்பநகை
சூனியத்தனம் கண்டிக்கத் தக்கது.மாநில முதல்வராக தனது நிலைப்பாட்டை உரக்க
சொல்ல அவருக்கு உரிமை உண்டு.மாறாக இரட்டை அரசியல் வேடம் போடுவது அவர் மீதான
நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் என்பதோடு அந்நியள் மாதிரி Split
personality decision தமிழக மக்களின் வாழ்வையும் பாதிக்கும்.
இப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்தை
திறக்க கூடாது என்று மக்கள் உண்ணாவிரதப் போரட்டம் இருப்பதை காவல்துறை
வன்முறையால் தடுத்து நிறுத்துவதை விட தீர்வுகளுக்கான வழிகளை பேச்சு
வார்த்தைகள் மூலம் தேடுவதே சிறந்தது.ஒரு வாரமாகியும் மத்திய,மாநில அரசு
தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தைக்குப் போகாத
உதாசீனமும்,போராட்டக்காரர்களை குற்றவியலில் சிக்க வைக்கும் போக்கு
கண்டிக்கத் தக்கது.
கூடங்குளம் அணுமின் நிலையம்
ஆபத்து இல்லாதது என்பதற்கான உத்தரவாதத்தையும் மக்களின் பயத்தையும்
போக்குவது ஒரு ஜனநாயக அரசின் கடமை.தொழில் வல்லுனர்களின் கருத்துக்கள் இரு
வேறு விதமாக மாறுபட்டு இருப்பதால் எது சரியென்ற முடிவுக்கும் மக்களுக்கு
குழப்பம்.மின்சக்தி நமது வாழ்க்கையின் முக்கிய ஒன்றாகிப் போன காலத்தில்
மின்சாரமில்லாத பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமேயில்லை.மேலும்
கூடங்குளம் மட்டுமல்ல,தொழிற்சாலைகள் அமையும் நகர்ப்புறங்களில் சுகாதார பக்க
விளைவுகள் உண்டாகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். ஆனாலும் வேலை
வாய்ப்புக்கள்,நாட்டின் பொருளாதாரம் கருதி சுகாதார குறைபாடுகளோடு நாம்
வாழக்கற்றுக் கொண்டிருக்கிறோம்.
1999ம் வருடம் பி..ஜே.பி அரசு இந்தியன்
ஏர்லைன்ஸ் IC 814 விமானத்தை தலிபான்கள் (Harkat-ul-Mujahideen) 176
பயணிகளையும் ஹைஜாக் செய்த போது மக்களின் உயிரே முக்கியம் என்று ஜஸ்வந்த்
சிங் தலிபான் பணயக் கைதிகளை கந்தகாரில் கொண்டு போய் ஒப்படைத்து பயணிகளை 7
நாட்கள் துன்பங்களுக்குப் பின் அழைத்து வந்தார். மக்களுக்காகவே அரசின்
கொள்கைகள்.அரசின் கொள்கைகளுக்காக மக்கள் அல்ல என்பதை உணர்ந்து
பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதே நல்ல
அரசுக்கு அடையாளமாகும்.
