உச்சி குளிரட்டும்... வெப்பம் அகலட்டும்...

கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகிக்
கொண்டிருக்கிறது. வெயிலில் அதிக நேரம் நடப்பதால் அவர்களது அழகான சருமம்
கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கூந்தலில் வெயில் படுவதால் முடியில்
இருக்கும் நீல நிறம் மறைந்து செம்பட்டை தன்மை உருவாகிறது. கவர்ச்சிமிக்க
கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பொலிவின்றி காணப்படுகிறது.
மே,
ஜுன் மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரித்து அழகுப் பாதிப்பு அதிகரிக்கும்
என்ற எண்ணம், அழகுப் பெண்கள் அனைவரையுமே வாட்டிக்கொண்டிருக்கிறது. "ரொம்ப
கவலைப்பட வேண்டியதில்லை. கவனமும், கொஞ்சம் சிரத்தையும், தேவையான அழகு
பராமரிப்பும் மேற்கொண்டால் அழகை குன்றாமல், குறையாமல் பாதுகாக்கலாம்''
என்று கூறும் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, கோடையில் உடல் அழகை பேணும் முறை
பற்றி விளக்குகிறார்.
"நமது சருமத்திற்கு
அத்தியாவசிய மானது கொழுப்பும், தண்ணீர் சத்தும். கோடை காலத்தில் அதிக
வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்.
அதிக அளவு தண்ணீர் மற்றும் திர வங்களை பருகி, உள்தேவையை சரிகட்ட வேண்டும்.
`மாயிசரைசரை' சருமத்தில் பூசி வெளித் தேவையை சமன் செய்யவேண்டும். உள்ளும்,
புறமும் இப்படி தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக்கொண்டால், கோடையில் சரும
அழகு அதிகம் பாதிக்காது.
கோடையில் அதிக
பிரச்சினைக்குரியது, புறஊதா கதிர்கள். அவை உடலில்படும்போது சருமம்
கறுக்கும். தொடர்ச்சியாக வெயில்பட்டால் அந்த பாதிப்பு அதிகமாகும். புற ஊதா
கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் இருக்க, `சன் ஸ்கிரீன் லோஷன்' பாதுகாப்பு
தருகிறது. இந்த கிரீமை வாங்கி உடலில் வெயில் எங்கெல்லாம் படுகிறதோ
அங்கெல்லாம் பூசிக்கொள்ள வேண்டும். இந்த லோஷன் புட்டிகளில் `எஸ்.பி.எப்'
என்ற அளவு (10 முதல் 60 வரை) குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள்
பத்து என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீமை வாங்குகிறீர்கள் என்றால் அது
(10 * 5) 50 நிமிடங்கள் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும்.
ஒரு மணி நேரம் நீங்கள் வெயில்படும் அளவிற்கு வெளியே செல்வதாக இருந்தால்,
இந்த 10 எண் கொண்ட எஸ்.பி.எப். லோஷன் வாங்கி, வெயில்படும் இடங்களில்
பூசிக்கொள்ளுங்கள்.
நீங்கள் கோடை சுற்றுலாவுக்காக
பஸ்சில் பகல் பொழுதில் தொடர்ச்சியாக அதிக நேரம் பயணம் செய்ய
வேண்டியிருந்தாலோ, மலை வாசஸ்தலங்களில் பகலில் அதிக நேரம் சுற்ற
வேண்டியதிருந்தாலோ 30 முதல் 40 என்ற எண் கொண்டவைகளை பயன்படுத்துங்கள்.
பெண்களின் முகம், கைகள், கழுத்தின் மேல் பகுதி- கீழ் பகுதி போன்றவைகளை
வெயில் நேரடியாக தாக்கும். அந்தப் பகுதிகளில் இதனை பூச வேண்டும்.
பூசிக்கொண்டு
வெளியே சென்றுவிட்டு, நீங்கள் திரும்பி வந்த பின்பு அதை கழுவி
சுத்தப்படுத்தவும் செய்யலாம். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.
ஆனால் காலையில் பூசிக் கொண்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி- மீண்டும்
பிற்பகல் வெயிலில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் பூசியதை
தண்ணீரால் கழுவி அப்புறப் படுத்திவிட்டு, மீண்டும் தேவைப்படும் நேரத்திற்கு
தக்கபடி கிரீமை பூசிக்கொள்ள வேண்டும்.
கோடையில்
நிறைய பேர் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறார்கள். குளோரின் கலந்துள்ள அந்த
தண்ணீரும், சூரிய கதிர்களும் உடலில்படும்போது சருமம் கறுத்துப்போகும் தன்மை
அதிகரிக்கும். அவர்கள் நீச்சலுக்காக இருக்கும் `சன் ஸ்கிரீன் லோஷனை'
வாங்கி பயன்படுத்திக்கொண்டு பயிற்சியை முடித்த பின்பு சுத்தமான தண்ணீரால்
தலை முதல் பாதம் வரை குளித்துவிட்டு, அதற்கென்று இருக்கும் லோஷனை வாங்கி
பயன்படுத்த வேண்டும்.
கறுத்துப்போவதை இதன் மூலம்
தடுக்கலாம். நமது சருமத்தின் கீழே உடலை பாதுகாக்க கொலோஜின் என்ற புரதம்
உள்ளது. வெயில்படும்போது இந்த புரதம் சுருங்கும். கண்களுக்கு அடியில் உள்ள
சருமத்திலும் கொலோஜின் உள்ளது. வெயில் கண்களில் படுவதாலும், வெயிலில் நாம்
கண்களை சுருக்கி, விரித்து பார்ப்பதாலும் கண் பகுதி கொலோஜின் விரைவாக
சுருங்கும்.
அதனை சரிசெய்வதற்காக, கோலோஜின் கலந்த
கிரீமை வாங்கி கண்களின் கீழ் பகுதி, வாய்ப்பகுதி போன்றவைகளில்
பூசிக்கொள்ளலாம். கை, முகம், கண் போன்ற பகுதிகளில் ஏற்கனவே வெயில் பாதிப்பு
ஏற்பட்டிருந்தால், வைட்டமின்-ஈ ஆயிலை வாங்கி, அந்த இடங்களில் பூசுங்கள்.
30 நிமிடங்களில் கழுவி விடுங்கள். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும்
செய்யலாம்.
No comments:
Post a Comment