Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Tuesday, 30 July 2013

விதிகளை மதிச்சா விதியை மிதிக்கலாம்!

விதிகளை மதிச்சா விதியை மிதிக்கலாம்!  





நாமளே இயக்குற வாகனத்துல ஏறி உக்காந்துட்டா... நமக்கு எங்கிருந்து தைரியம் வருதோ தெரியல... கன்னா பின்னான்னு ஓட்டி, மத்தவங்கள பீதிக்கு உள்ளாக்குறோம். நமக்கு வண்டியை "ஸ்டார்ட்' பண்ண உடனே, போக வேண்டிய இடத்துக்கு சீக்கிரமா போயாகணும். அதனாலே, எதைப் பற்றியும் கவலைப்பட்ட மாதிரி தெரியல. இதுலே, இரு சக்கர வாகனம் முக்கியத்துவம் பெறுது. இதுலே ஏறிட்டா, நமக்கு ஹீரோ ஞாபகம்
தான் வரும். குறுக்கு சந்துல வரும் போதே, மத்தவங்க பயந்து விலகிப் போற மாதிரி, "ஹாரன்' அடிப்போம். எவ்வளவு வேகமா போகணுமோ, அவ்வளவு வேகமா போறப்ப கூட, போன் வந்துருச்சின்னா உடனே எடுத்து பேசிக்கிட்டே வண்டி ஓட்டறது பல பேரோட வீரத்துக்கு அடையாளமா தெரியுது. பின்னாடி உட்கார்ந்துட்டு வர்ற ஆளோட பேசிட்டே போறது ஒரு ஸ்டைல். பின்னாடி உட்கார்ந்துட்டு வர்றது, பெண்ணா மட்டும் இருந்துட்டா, அவ்வளவு தான், உலகத்தையே மறந்துடுவாங்க. இதிலே, சாலை நெனப்பெல்லாம் எங்க வரும் இவங்களுக்கு. இப்போ ஆட்டோ கதைய பாப்போம். ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சிட்டா, பல பேரு என்ன செய்றாங்கன்னா, அவங்க சவுகரியத்துக்கு வண்டியை சடார்னு திருப்புவாங்க. அப்பதான் எதிரில் யாராவது டூ வீலர்லே வந்து மோதி கீழே விழுவாங்க. இல்லே, நடந்து வர்றவங்க தடுமாறி போய் அதிர்ச்சி அடைவாங்க.
"வீட்ல சொல்லிட்டு வந்துட்டீங்களா...'னு, விழுந்தவங்ககிட்டேயே கேள்வி கேக்கற ஒரு சொகம் இருக்கு பாருங்க. திருப்பங்களில் கண்மூடித்தனமாய் வேகமாய் திருப்புவோம். இல்லாட்டி கொஞ்சமே கொஞ்சம் சின்ன சந்திலே கூட நாம கஷ்டப்பட்டு, மற்றவங்களையும் கஷ்டப்படுத்தி போக வேண்டிய இடத்துக்கு போயிடுவோம். ஆட்டோவே அழும் அளவுக்கு பயணிகளை ஏற்றி கொள்வது மட்டுமா, பள்ளி செல்லும் குழந்தைகளை கூட, வலது, இடது பக்கத்துல உட்கார வெச்சு, ஆட்டோவுக்குள்ளேயே "சர்க்கஸ்' நடக்கும்.
பள்ளி வாகனம், பஸ்ல கதை வேற மாதிரி இருக்குது. பள்ளி குழந்தைகளை இறக்கி விட்டுட்டு, அவங்க பாதுகாப்பா இறங்கிட்டாங்களா என்று தெரியாமல், இல்லே தெரிந்துக் கொள்ள விருப்பமில்லாமல், வண்டியை உடனே எடுத்துருவாங்க சில பேரு. இதனால், குழந்தைகள் பாதிக்கப்படுறாங்க. தனியார் பஸ்ச எடுத்துக்கிட்டீங்கன்னா... குழந்தைகள வெச்சிட்டு இறங்கி, ஏறுறவங்க, வயசானவங்க, சீக்கிரம் ஏறலைனா மட்டும் அவங்களை ஒரு வழி பண்ணிடறாங்க. முடிந்த வரை, "ஓவர் டேக்' எடுத்து வாகனங்கள் வர்ற வழியிலே மறிச்சு, வாகனங்கள் அணிவகுத்து நிக்க வெச்சிடறாங்க.
வண்டி ஓட்டற நேரத்திலே, மொபைல் போன்ல யாராவது போன் பண்ணிட்டாங்கன்னா அவ்வளவு தான். வண்டியில் இருக்கிற பயணிங்களோட பாதுகாப்ப பத்தி யோசிக்காம, உடனே மொபைல் போன்ல பேச ஆரம்பிச்சுடுறாங்க. லாரி எதிரே வர்றப்ப, கொஞ்சம் உத்து பாக்கும் போது, நம்ம மேலே ஏத்திடுவாங்களோன்னு, மனசுக்குள்ள கொஞ்சம் "ஜெர்க்' அடிக்கும். ஆனா, நாம அதே லாரிலே ஏறிட்டா மற்றவங்களுக்கு ஒரு திகில் கொடுப்போம் பாருங்க. படத்துல பாக்குற "எபெக்ட்' அப்படியே கண் முன்னால வந்து போகும்.
இப்படி நிதானத்தோட இல்லாததால், ஏற்படுற உயிர் சேதங்கள் கணக்கு வழக்கில்லாமல் நீண்டுகிட்டே இருக்கு. சாலை விதிகளை மதிச்சு, ஒருத்தர் வண்டி ஓட்டிட்டு போனாலும், மத்தவங்க சாலை விதிகளை மதிச்சு வரணுமே. ஆகவே...இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், "சாலை விதிகளை முறையா மதிச்சு நடந்தோம்னா, அதை விட சிறந்த பயணம் வேறு எதுவும் இருக்காது' என்பதுதான்.

No comments:

Post a Comment