50 பேரை மணந்த கேரள சாகசகாரி!
ா.
நாகரீகங்கள் வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் மனிதன் காமத்துக்கு பலி ஆகின்ற நிலையை பார்க்கும்போது நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கின்றோமா என்ற சந்தேகம் எழுகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் காவல் துறையை ஆட்டி படைத்த ஜெயா என்ற பெண்ணின் வரவுக்கு பிறகு தற்சமயம் சஹானா என்ற கேரளா பெண்ணின் சாகசத்திற்கு நம்மூர் ராமன்கள் பலி ஆகி இருப்பதை பார்த்தால் என் சந்தேகம் நியாயம்தான். மேலே படியுங்கள்.....
''பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்'' என்ற பழமொழிக்கு ஏற்ப, பெண் என்றால் ஆண்களும் 'ஜொல் வடிப்பார்கள்' என்பது போல என்ஜீனியர், கால்பந்து வீரர் என 50 பேரை திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறார் கேரளாவை சேர்ந்த அழகி. நகை, பணத்தை சுருட்டிய கேரளா அழகியை தற்போது காவல்துறை தேடி வருகிறது.
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு மாருதி கார் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணிகண்டனின் செல்போனே அவருக்கு ஏமனாக மாறிவிட்டது. முதன் முதலில் செல்போன் மூலம் அறிமுகமாகி உள்ளார் கேரளாவை சேர்ந்த சகானா. அவரது முதல் பேச்சே, ''உங்கள் குரல் பிடித்திருக்கிறது. அதனால் உங்களையும் பிடித்திருக்கிறது'' என்று மணிகண்டனை தனது கிளுகிளு பேச்சால் கவிழ்த்து விட்டார் சகானா. செல்போனில் சில நாட்கள் பேசிக் கொண்ட இருவரும் ஒருநாள் நேரில் சந்தித்தனர். சகானா அழகில் மயங்கிய மணிகண்டனிடம், தான் வக்கீலுக்கு படித்துள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தல் வக்கீல் தொழில் செய்வதாகவும், அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப்போவதாகவும் கூறி மணிகண்டனை மயக்கிவிட்டார்.
சகானாவின் இந்த பேச்சை நம்பிய மணிகண்டன், பெற்றோருக்கு தெரியாமல் அவரை ரகசிய திருமணமும் செய்து கொண்டார். நாளடைவில் பெற்றோருக்கு தெரியவந்தது. மகனின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்காத பெற்றோர் மணிகண்டன் - சகானாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காலில் மெட்டி அணிவித்து, இப்படி அத்தனை திருமண சடங்குகளையும் செய்து சகானாவை கைப்பிடித்தார் மணிகண்டன்.
திருமணத்துக்கு பிறகு மணிகண்டனிடம், தனது சொந்த ஊர் கேரளா என்றும் பெற்றோர் இறந்து விட்டதால் தான் ஒரு அனாதை என்றும் கூறியிருக்கிறார் சகானா. இதை நம்பிய மணிகண்டன், சகானாவுடன் குடும்பம் நடத்தினார். 2 மாத குடும்ப வாழ்க்கை சகானாவுக்கு புளித்துவிட்டது. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டி இருப்பதால், படிக்க தனிமை தேவைப்படுகிறது என்று கூறி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படிக்கிறேன் என்று சகானா கூறியதை நம்பிய மணிகண்டன் அவரை விடுதியில் சேர்த்தார்.
தினந்தோறும் மனைவி சகானாவை பார்த்துவிட்டுதான் வீட்டிற்கு செல்வார் மணிகண்டன். கடந்த ஜனவரியில் மனைவியை பார்க்க சென்ற மணிகண்டனுக்கு அதிர்ச்சி. விடுதியை காலி செய்துவிட்டு மாயமானார் சகானா. அதன்பிறகு ஒரு நாள் போனில் மணிகண்டனை தொடர்பு கொண்ட சகானா, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத சென்றுவிட்டதாக கூறியதோடு சரி அதன் பிறகு, பத்திரிகை செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டார் மணிகண்டன். சகானாவால் இழந்தது பல லட்சங்கள் என்று வேதனையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்துள்ளார்.
சகானா வலையில் அடுத்து விழுந்தவர் சென்னையை சேர்ந்த கால்பந்து வீரர் பிரசன்னா. டிப்ளமோ என்ஜினீயரான பிரசன்னா, சென்னை புளியந்தோப்பில் வசித்து வருகிறார். சகானாவை முதன் முறையாக புரசைவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் சந்தித்துள்ளார். முதல் சந்திப்பிலேயே பிரசன்னாவை தனது மாயவலையில் வீழ்த்தினார் சகானா.
கடந்த மார்ச் 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் பிரசன்னா - சகானா திருமணம் நடந்தது. இரண்டு மாதங்கள் குடித்தனம் செய்துவிட்டு வக்கீலுக்கு படிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்ற சகானா, போனில்தான் பிரசன்னாவுடன் பேசி வந்துள்ளார். பத்திரிகை செய்தியை பார்த்து தற்போது அதிர்ச்சியில் உள்ளார் பிரசன்னா.
ஒரு நாள் பிரசன்னாவின் தாயாருடன் சகானா, புளியந்தோப்பு மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது பக்கத்து தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தாயார், வேறொரு பெண்ணுடன் சகானா வருவதை பார்த்து, அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறார். ஆனால் பிரசன்னா தாயாரோ, நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள், சகானா எனது மருமகள் என்று கூறியுள்ளார்.
சிக்கிக் கொண்ட சகானா, சுரேஷின் தாயாரை மிரட்டியதோடு, பிரசன்னாவின் மனைவிதான் நான் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் சகானா. அதிர்ச்சி அடைந்த சுரேஷ் தாயார், நடந்ததை தனது மகனின் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். பிரசன்னா தயார், சுரேஷ், அவரது தாயார், சகானா ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்தது போலீஸ். அப்போது, நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை என்று கூறுவது போல், பிரசன்னாதான் எனது கணவர் என்று சத்தியம் செய்துள்ளார் சகானா. தற்போது சகானாவால் ரூ.5 லட்சத்தை இழந்து தவிக்கிறார் பிரசன்னா.
இப்படி பல வாலிபர்களை தன்னுடைய காமப்பார்வையாலும், வசிகரத்தாலும் விழவைத்த சகானா, திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 50 பேர். சாகசகாரி சகானா மீது வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு என பல போலீஸ் நிலையங்களிலும் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதோடு மத்திய குற்றப்பிரிவு போலீசிலும், சகானாவில் ஏமாந்த கணவன்கள் 15 பேர் புகார் அளித்துள்ளனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், அடையாரை சேர்ந்த சரவணன், சீனிவாசன், தியாகராயநகரைச் சேர்ந்த ராஜா, சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழகத்தை கலக்கிய சகானா, கேரளா வாலிபர்களை விட்டுவைக்கவில்லை. அவரிடம் ஏமாந்தவர்கள் ஏராளம்.
இந்த புகார்கள் அனைத்தும் தற்போது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீஸ்தான் விசாரிக்கிறது. தனது லீலைகள் தெரிந்துவிட்டதால் சகானா தற்போது தலைமறைவாகிவிட்டார். போலீசார் தேடி வருகிறார்கள். சகானாவின் தாய் மொழி மலையாளம் என்றாலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது என பல மொழிகளில் பேசி கலக்கி வந்துள்ளார்.
'நான் அவனில்லை' என்ற சினிமா கதை போல, சாகசகாரி சகானாவின் கதை தற்போது உள்ளால் அவரை பிடித்தால்தான் இதில் எது உண்மை என்பது தெரிய வரும். மிகவும் புனிதமான காதலையும், திருமணத்தையும் மையமாக வைத்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்த மோசடி ராணி, மயக்கும் மோகினி, மாயக்காரி சகானா எங்கே இருக்கிறார்?
No comments:
Post a Comment